
மலாக்காவில் கருக்கலைப்பில் ஈடுபட்டு, சிசுவின் கருவை மறைக்க முயன்ற 18 வயதுடைய இளம் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, 22 வாரக் கருவைச் சிதைத்த நிலையில், இரத்தப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்த இளம் பெண்ணின் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையில், அந்தப் பெண் மாத்திரைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். உயிரிழந்த நிலையில் வெளியேறிய கருவை அவரது காதலன் மறைத்து வைத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மலாக்கா குற்றப்புலனாய்வுத் துறையினர் அந்த இளைஞரைக் கடந்த மாதம் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து கடந்த மே 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அந்த இளைஞர் தனது காதலியின் வீட்டில் இருந்து கருவை எடுத்துச் சென்று, தனது வீட்டின் பின்புறம் புதைக்கத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
அதுவரை சிசுவின் கருவை ஒரு மகிழுந்துக்குள் அவர் மறைத்து வைத்திருந்தார். இவர்கள் இருவர் மீதும் இதற்கு முன்னதாக எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்பதும், போதைப்பொருள் சோதனையில் பாதிப்பு ஏதும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வரும் வெள்ளிக்கிழமை ஆயிர் கெரோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று மலாக்கா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.



