
மலேசியாவின் முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி, RM110 கோடி ரிங்கிட் (RM1.1 billion) மதிப்பிலான செமிகண்டக்டர் (Semiconductor) முதலீட்டு விவகாரம் தொடர்பாக, மூன்றாவது நாளாக இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) முன்னிலையாக உள்ளார்.
நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட விசாரணை சுமார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் மீண்டும் விசாரணை தொடர உள்ளது.
பொருளாதார அமைச்சிற்கும், ஐக்கிய இராச்சியத்தின் ‘ஏ.ஆர்.எம்’ (ARM Limited UK) நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான குறைக்கடத்தித் துறை சார்ந்த மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், அதிகார துஷ்பிரயோகம், நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது ரஃபிஸி காலை 10 மணியளவில் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் நாள் விசாரணை இரவு 7 மணியளவில் நிறைவடைந்த நிலையில், கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக இன்று மீண்டும் அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு மூத்த இயக்குனர் டத்தோ முஹம்மத் ஹபாஸ் நாசர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த முதலீட்டு விவகாரத்தில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து அவரிடம் விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணை மலேசிய அரசியல், பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முக்கிய முதலீட்டுத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையத் தரப்பில் கூறப்படுகிறது.



