
ஹரி ராயா ஹஜ்ஜி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, மே 24 முதல் 31 வரை நடைபெறும் “Ops Hari Raya Aidiladha” நடவடிக்கையின் போது சாலை போக்குவரத்துத் துறை (JPJ) ட்ரோன் பயன்பாட்டை அதிகபட்சமாக பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
JPJ துணை இயக்குநர் ஜெனரல் (திட்டமிடல் மற்றும் செயல்பாடு) ஜாஸ்மானி ஷஃபாவி கூறுகையில், இரட்டை கோட்டில் முந்திச் செல்வது மற்றும் நெடுஞ்சாலைகளில் அவசர வழித்தடத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற போக்குவரத்து குற்றங்களை கண்டறிய முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றார்.
“கடந்த மார்ச் மாத ஹரி ராயா ஐடில்பித்ரி நடவடிக்கையின் போது ட்ரோன்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த முறை Ops Hari Raya Aidiladha முழுவதும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்,” என்று அவர் டெங்க்கிலில் இன்று தெரிவித்தார்.
விபத்து அபாயம் அதிகம் உள்ள 288 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவற்றில் Kuala Lipis – Gua Musang, Gua Musang – Kuala Krai, Gerik – Jeli, Hulu Terengganu – Kuala Terengganu, Segamat – Mersing மற்றும் Menora Tunnel – Sungai Perak உள்ளிட்ட சாலைகள் அடங்கும்.
கடந்த ஹரி ராயா ஐடில்பித்ரி நடவடிக்கையின் போது சுமார் 5,000 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாகவும் JPJ தெரிவித்துள்ளது.
அடுத்த வார நடவடிக்கையின் போது ஒன்பது முக்கிய போக்குவரத்து குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படும். அவை:
- அதிவேக ஓட்டம்
- போக்குவரத்து சிக்னல்களை மீறுதல்
- இரட்டை கோட்டில் முந்திச் செல்வது
- அவசர வழித்தடத்தை தவறாக பயன்படுத்துதல்
- சீட்பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது
- வரிசையை மீறி செல்லுதல்
- வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துதல்
- அதிக சுமை ஏற்றுதல்
- ஆபத்தான முறையில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல்
மேலும், வர்த்தக மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்திற்கு முன் வாகனங்களை பரிசோதித்து, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொள்ளுமாறு ஜாஸ்மானி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.



