
நாட்டில் விலங்கு நலத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கும் பினாங்கு மாநகர மன்றம் (MBPP), தெருநாய்களை கொல்லாத “Zero-Kill” கொள்கையை கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “பிடித்தல் – கருத்தடை செய்தல் – விடுவித்தல்” (Trap-Neuter-Release / TNR) திட்டத்தின் கீழ், MBPP மற்றும் விலங்கு பாதுகாப்பு அமைப்பான IAPWA இணைந்து இதுவரை 8,484 தெருநாய்களுக்கு கருத்தடை செய்துள்ளன.
மேலும், ஆயிரத்திற்கும் அதிகமான நாய்கள் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய பினாங்கு மாநகர மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த முறை மிகவும் மனிதாபிமானமானதும் பயனுள்ளதுமான அணுகுமுறை எனக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்காக MBPP 100,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளதுடன், Pentamaster மற்றும் Greatech Technology நிறுவனங்களும் தலா 100,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியுள்ளன.
திட்டத்தை செயல்படுத்த மாதத்திற்கு சுமார் 70,000 ரிங்கிட் வரை செலவாகிறது என்று IAPWA தெரிவித்துள்ளது.
இதற்காக பொதுமக்களின் ஆதரவும் தன்னார்வலர்களின் பங்களிப்பும் அவசியம் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை, செல்லப்பிராணி நாய்களை வளர்ப்பவர்கள் ஆண்டுக்கு 10 ரிங்கிட் கட்டணத்தில் தங்கள் நாய்களை இணையம் வாயிலாக பதிவு செய்யுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



