
அரசுப் பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) கொள்கை மூலம், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் இதுவரை 2.14 மில்லியன் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டதுடன், 4.2 மில்லியன் ரிங்கிட் எரிபொருள் மானியச் செலவும் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சேமிப்பு, WFH கொள்கை அரசு ஊழியர்களுக்கு பணிச் சுதந்திரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மானிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் நிதிச் சுமையையும் குறைத்துள்ளதாக அவர் கூறினார்.
“இந்த முயற்சியில் தற்போது நாடு முழுவதும் 357,000 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஊழியர்களுக்கு வசதியை அளிப்பதைக் கடந்தும், அரசாங்கத்திற்கு உண்மையான நிதி மதிப்பையும் உருவாக்கியுள்ளது,” என்றார்.
“மக்களுக்கான செலவீனங்களே அரசாங்கத்தின் முன்னுரிமையாகத் தொடரும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவில் உள்ள டேவான் தாமார் சாரியில் நேற்று நடைபெற்ற அமலாக்க அமைப்புகள் நேர்மை ஆணையம் (EAIC) ஏற்பாடு செய்த ERAT Appreciation Ceremony நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகளாவிய எரிபொருள் மானியச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தச் சேமிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக மாதத்திற்கு சுமார் 700 மில்லியன் ரிங்கிட் அளவில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் மானியச் செலவு, 2024 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சராசரியாக 5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாகவும், இது ஏழு மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்றும் அவர் தெரிவித்தார்.



