
ஏப்ரல் 2026 மாதத்தில் மட்டும் 7,057 மலேசியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் 5,855 ஆக இருந்த பணிநீக்க எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் கணிசமாக உயர்ந்திருப்பது பொருளாதார நிலைமை குறித்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
PERKESO வெளியிட்ட தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே மொத்தம் 24,100 பேர் வேலை இழந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 47 விழுக்காடு அதிகரிப்பாகும்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி சிக்கல்கள், எரிசக்தி விலை உயர்வு, மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் உற்பத்திச் செலவின அதிகரிப்பு போன்ற காரணங்களால் பல நிறுவனங்கள் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உற்பத்தித் துறை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலைகள் மட்டுமின்றி சேவை மற்றும் பிற துறைகளிலும் பணிநீக்க அலை பரவி வருவதாக கூறப்படுகிறது.
“வேலை இழப்பு என்பது ஒரு சம்பளம் நிறுத்தப்படுவது மட்டுமல்ல; அது ஒருவரின் நம்பிக்கை, அடையாளம் மற்றும் எதிர்காலத் திட்டங்களையும் பாதிக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி,” என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிதிச் சுமை, கடன் பொறுப்புகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் குறித்து கவலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலை இழந்தவர்கள் உடனடியாக PERKESO Employment Insurance System (EIS) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறும், முன்னாள் சக ஊழியர்கள் மற்றும் தொழில்துறை தொடர்புகளைத் தொடர்ந்து பேணுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், HRD Corp பயிற்சி திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் மூலம் புதிய தொழில் பாதைகளை ஆராயலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“சவால்கள் இருந்தாலும், திறன் மேம்பாடு மற்றும் புதிய வாய்ப்புகளைத் தேடும் முயற்சியே மீண்டும் முன்னேறும் பாதையாக அமையும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


