33.1 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியாகவில்லை- அமெரிக்கா மறுப்பு

அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது.

ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரான், அமெரிக்கா இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், 4 அமெரிக்கர்களையும் விடுவிப்பதற்காக ஈரான் கைதிகளை விடுவிக்கவும் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈரானுக்கு தரவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டதாக ஈரான் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஈரானுடன் கைதிகள் பரிமாற்றம் நடந்ததாக வெளியான தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ராப் க்ளெய்ன் கூறியதாவது:-

துரதிஷ்டவசமாக ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பொய்யானது. 4 அமெரிக்கர்களையும் விடுவிக்க எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அவர்களை விடுவிக்க நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறோம்.

அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு இது வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றார்.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதனை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் இணைந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles