
ஜலான்கெபூன், கம்போங் ஜாவாவில் அமைந்துள்ள எஸ்.ஜே.கே.டி பத்து அம்பாட் பள்ளிக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலகம், கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK), கிள்ளான் நில அலுவலகம், தனியார் மேம்பாட்டு நிறுவனம், மன்ற உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக சபை (LPS), பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG) மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஜே.கே.டி பத்து அம்பாட் தற்போது பழமையான மற்றும் சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளி அமைந்துள்ள தற்போதைய நிலம் தனியார் உரிமைக்குட்பட்டதாக இருப்பதால், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய இடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புதிய பள்ளிக் கட்டிடத்தை அமைப்பதற்காக அரசாங்கம் ஆறு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக்க அவர் மேலும் குறிப்பிட்டார். இருப்பினும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி வசதி இல்லாததால் திட்டம் முன்னேறுவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதனையடுத்து, தேவையான அரசாங்க உதவி மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு வோங் கா வோவையும் தொடர்புகொண்டு, கல்வி அமைச்சின் கவனத்திற்கும் உதவிக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக டாக்டர் குணராஜ் கூறினார். எதிர்கால சந்ததியினரின் கல்வி நலனை உறுதி செய்யும் வகையில், எஸ்.ஜே.கே.டி பத்து அம்பாட் புதிய பள்ளிக் கட்டிடத் திட்டம் விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.



