
மலேசிய உணவகங்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் நல்லதொரு தீர்வு காணப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த சாதகமான அறிவிப்புக்கு மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரிமாஸின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி என்ற டத்தோ சுரேஷ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனை நேரில் சந்தித்த போது இந்த நற்செய்தி தங்களுக்கு வழங்கப்பட்டதாக டத்தோ சுரேஷ் குறிப்பிட்டார். இந்த முக்கிய சந்திப்பின் போது, பிரிமாஸ் சங்கத்தின் துணைத் தலைவர் சி. கிருஷ்ணன் மற்றும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் மோசின் பின் அப்துல் ரசாக் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பின் போது, உள்ளூர் உணவகங்கள் சந்திக்கும் கடுமையான ஆள் பற்றாக்குறை மற்றும் வணிகத்தை தடையின்றி நடத்த அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சரிடம் விரிவாக விளக்கப்பட்டதாக டத்தோ சுரேஸ் குறிப்பிட்டார்.
அனைத்தையும் கேட்டறிந்த அமைச்சர் ரமணன், “இப்பிரச்சினைக்கு நான் உதவ முடியாவிட்டால், பிறகு வேறு யார் உதவுவார்கள்?” என்று தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் வகையில் உறுதியளித்ததாக டத்தோ சுரேஷ் கூறினார். அமைச்சரின் இந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகள், தங்களின் ஒட்டுமொத்த உணவகத் துறைக்கும் பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



