
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் மற்றும் டிஆர் காங்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வெற்றியைப் பெற முடியவில்லை.
ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே போர்த்துகலின் ஜோவ் நெவ்ஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆரம்பத்திலேயே கிடைத்த இந்த முன்னிலை போர்த்துகலுக்கு நம்பிக்கையை அளித்தது. தொடர்ந்து பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், கூடுதல் கோல்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், முதல் பாதியின் இறுதியில் 45ஆவது நிமிடத்தில் டிஆர் காங்கோ வீரர் யோனே விஸ்ஸா, கார்னர் கிக்கிலிருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். இந்த கோல் உலகக் கிண்ண வரலாற்றில் டிஆர் காங்கோ அணியின் முதல் கோலாகப் பதிவானது. இதன் மூலம் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் போர்த்துகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல கோல் வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் போட்டி 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது. முந்தைய போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்த நிலையில், ரொனால்டோவால் கோல் அடிக்க முடியாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.



