
செய்தி / படங்கள் : எம்.முருகன்
தமிழகத்தில் நெசவுத் தொழிலை பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழங்கியதைப் போன்ற சிறப்பு உதவித் திட்டங்களை தற்போதைய தலைமையும் முன்னெடுக்க வேண்டும் என்று கானாட்டுக்காத்தானைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நெசவாளர்களுக்காக பல்வேறு சலுகைகள் மற்றும் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். குறிப்பாக, பட்டு நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் நூல்கள், கைத்தறி உபகரணங்கள் மற்றும் தொழிலை முன்னேற்ற தேவையான வசதிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நெசவுத் தொழில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக வெங்கடராமன் கூறினார். “நாங்கள் தரியில் சேலைகளை நெய்து வாழ்வாதாரம் நடத்துகிறோம். ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக தொழிலை தொடர்வதே சிரமமாகியுள்ளது. பல நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்,” என்றார்.
எனவே, நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் நூல் வழங்குதல், தொழில் மேம்பாட்டு உதவிகள், மானியங்கள் மற்றும் சிறப்பு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் செய்தது போன்று, இன்றைய அரசியல் தலைவர்களும் நெசவாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். நெசவுத் தொழிலை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்,” என வெங்கடராமன் கேட்டுக்கொண்டார்.



