
பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரான தெங்கு ஸப்ருல் அஜீஸ், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிடுவதற்கான முன்மொழிவை கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கெஅடிலான் தலைவர் மற்றும் பிரதமரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் இந்த முன்மொழிவு கட்சித் தலைமையிடம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். தேர்தல், குறிப்பாக பொதுத் தேர்தல் நடைபெறும் சூழலில், சிலாங்கூரில் போட்டியிடும் வாய்ப்பு தமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
எனினும், இது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “போட்டியிடும் வாய்ப்பு குறித்து நான் முன்மொழிவு செய்துள்ளேன். ஆனால் இறுதி முடிவு கட்சித் தலைமையின் பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்படும்,” என்றார்.
அம்பாங் கெஅடிலான் கிளை உறுப்பினருமான தெங்கு ஸப்ருல், தமக்கு குறிப்பிட்ட இலக்கு நாடாளுமன்றத் தொகுதி எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். கட்சித் தலைமையினர் பொருத்தமானதாக கருதும் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், காலியிடமுள்ள தொகுதியில் சேவை செய்யும் வாய்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் அவர் கூறினார்.



