
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சுவா (Chuah) சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான டத்தோ யீ பூன் லீ-க்கு ஆதரவாக, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சார நிகழ்வின் போது, பொதுமக்களை நேரில் சந்தித்து நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கிய அவர், தேர்தல் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, வெற்றியை உறுதிசெய்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் தேர்தல் இயந்திரத்தினருக்கு வழங்கினார்.
இதுகுறித்து பேசிய டாக்டர் குணராஜ், “நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. அனைத்து மதங்களையும், அனைத்து இன மக்களையும் சமமாக அரவணைத்து செயல்படும் கூட்டணி நம்பிக்கை கூட்டணியே. எனவே, மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.
மேலும், தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த ஒவ்வொரு தொண்டரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், மக்களிடம் நம்பிக்கை கூட்டணியின் சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நம்பிக்கை கூட்டணியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பல்வேறு தொகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு, வாக்காளர்களின் ஆதரவை திரட்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


