
‘ரோக்கி’ என்ற வளர்ப்பு நாயின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் கிள்ளான் நாய் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 24 வயதான ஷா ஹிஸாம், எந்த விலங்கிற்கும் தீங்கு விளைவிக்கவோ அல்லது கொல்லவோ தமக்கு நோக்கம் இருக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற அந்த நடவடிக்கையில், கிள்ளான் மாநகர் மன்றத்தால் வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தாம் பங்கேற்றதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரோக்கியின் மரணம் தமக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகக் கூறிய ஷா ஹிஸாம், “அன்று இரவு எந்த விலங்கிற்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நான் அங்கு செல்லவில்லை. குறிப்பாக ரோக்கியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை,” என்றார்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஷா ஹிஸாமுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுத்தவர்கள் மற்றும் இணையத்தில் அவருக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் ரபிக் ரஷீத் அலி எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அவதூறான கருத்துகள் தொடர்பான ஆதாரங்கள் தற்போது ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மற்றவர்களைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தனிநபர்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட செய்தி இணையதளங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
உள்ளூர் ரூகுன் தெதாங்கா (Rukun Tetangga) அமைப்பின் எழுத்துப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாகவே ஷா ஹிஸாம் அந்த நாய் பிடிப்பு நடவடிக்கையில் பங்கேற்றதாகவும் அவரது வழக்கறிஞர் விளக்கமளித்தார்.



