
திரெங்கானு மாநில அரச குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்ட ஆடவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஒத்மான் இந்தத் தண்டனையை விதித்தார்.
தீர்ப்பின்போது, அரச குடும்பம், மதம் மற்றும் இன உணர்வுகள் தொடர்பான குற்றங்களை நீதிமன்றம் தீவிரமாகக் கருத வேண்டியது அவசியம் என்று நீதிபதி வலியுறுத்தினார்.
இதுபோன்ற செயல்களின் தாக்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தில் பரவலான விளைவுகளையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச நிறுவனத்தை அவமதிக்கும் வகையிலான செயல்கள், அதன் கண்ணியம் மற்றும் அந்தஸ்தைத் தாழ்வாகக் கருதும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் இருந்து வருவதால், அன்றைய தேதியிலிருந்தே மூன்று மாத சிறைத்தண்டனைக் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரச குடும்பம், இனம் மற்றும் மதம் போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



