
கிழக்குக் கரை ரயில் பாதை (ECRL) சேவை திட்டமிட்ட காலத்தைவிட முன்னதாக, எதிர்வரும் டிசம்பர் 2026ஆம் மாதத்திலேயே தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
ECRL சேவைக்கான சோதனை மற்றும் அங்கீகார நடைமுறைகளை எளிதாக்கி, குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்வதற்கான வழிகளை போக்குவரத்து அமைச்சகம் தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
“அனைத்தும் சுமூகமாக நடைபெற்றால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சேவையை ஆரம்பிப்பதற்குப் பதிலாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ECRL சேவையைத் தொடங்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.
இருப்பினும், சோதனை மற்றும் அங்கீகார நடைமுறைகளை விரைவுபடுத்துவது பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் உறுதியளித்தார்.
ECRL சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்பு, அதன் அனைத்து 10 ரயில் தொகுதிகளும் FFR சோதனை மற்றும் அங்கீகார நடைமுறைகளை கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மொத்தம் 665 கிலோமீட்டர் நீளமுள்ள ECRL திட்டத்தின் முதல் கட்டப் பாதை, கிளந்தானின் கோத்தா பாருவை சிலாங்கூரின் கோம்பாக்குடன் இணைக்கிறது.
இந்த மிகப்பெரிய ரயில் உள்கட்டமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கியுள்ளன.
ECRL சேவை தொடங்கப்பட்டதும், கிழக்குக் கரை மாநிலங்களுக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



