
தலைநகர் செந்தூல், கம்போங் காசிப்பிள்ளை ஜாலான் இஸ்மாயில் கானி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்தத் தீ விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உடல் மற்றும் கால்களில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து தொடர்பான அவசர அழைப்பு கிடைத்தவுடன், செந்தூல், ஹாங் துவா மற்றும் தெற்கு கோம்பாக் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அகமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்களின் தீவிர நடவடிக்கையைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், மூன்று குடிசை வீடுகளும் தீயில் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது மற்றும் அதன் மூலக்காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



