
வேலைவாய்ப்புச் சந்தையில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மலேசிய இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த திறன்களை வழங்குவதை ‘AI for the People’ திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணான் தெரிவித்தார்.
குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயனடையும் வகையில், செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் AI பயிற்சி, எரிபொருள் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து மாறிவரும் நிலையில், இளைஞர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான புதிய திறன்களை வழங்குவது முக்கியம் என்றும் ரமணான் வலியுறுத்தினார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வருமான வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் பொருளாதார முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என ரமணான் தெரிவித்தார்.



