
தாய்லாந்துக்குச் செல்லும் மலேசியர்கள் உட்பட 60 நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு முக்கியமான பயண விதிமாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலம் 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக பாதியாகக் குறைக்கப்படுகிறது.
தாய்லாந்தின் சுற்றுலாத்துறைக்கு வெளிநாட்டுப் பயணிகள் முக்கியமானவர்களாக உள்ள நிலையில், வெளிநாட்டினருடன் தொடர்புடைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், விசா விலக்கு நடைமுறையை மேலும் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தும்.
இதற்கிடையில், Thailand Digital Arrival Card (TDAC) நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தாய்லாந்துக்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
சுற்றுலா தாய்லாந்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், பயணிகளுக்கான வசதிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் விசா விலக்கு விதிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



