
சிங்கப்பூர் முழுவதும் காரில் சுற்றித் திரிந்து, 10,000க்கும் மேற்பட்ட மோசடிக் குறுந்தகவல்களை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த 28 வயது ஆடவருக்கு ஒரு ஆண்டு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், S$1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியரான ஒங் காக் சேங் (Ong Kak Seng) என்பவர் தனது காரில் SMS Blaster எனப்படும் கருவியை வைத்துக்கொண்டு சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத இணையச் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் பணிக்கு உதவுவதாக நினைத்தே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வரை காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அவர் பயன்படுத்திய SMS Blaster கருவி, அவர் பயணிக்கும் பகுதிகளில் அருகில் இருந்தவர்களின் கைத்தொலைபேசிகளுக்கு WhatsApp கணக்குகளை குறிவைக்கும் மோசடிச் செய்திகளை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மோசடிச் செய்திகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் WhatsApp கணக்குகளை மோசடிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒங் கடன் சுமையில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், ஒங்கிற்கு ஒரு ஆண்டு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் S$1,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



