
கோலாலம்பூர், செப்டம்பர் 16: ஒற்றுமை உணர்வுடன் மலேசிய தினத்தை அனைத்து மக்களும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலேசிய தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக இந்த ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரவாக் மாநில மக்களுக்கும், அங்கு வாழும் இந்திய சமூகத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
உலகின் பல நாடுகளில், குறிப்பாக முன்னாள் காலனித்துவ நாடுகளில், சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட டாக்டர் குணராஜ், சில நாடுகளில் தேசிய தினமும் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்தார்.
“கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நமது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம், இன்று செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். நமது நாட்டில் தேசிய உணர்வை வலுப்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய தினங்கள் கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர தினத்திற்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் மலேசிய தினத்திற்கும் அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அந்த வகையில் இந்த ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான மாநிலமாக சரவாக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னாள் தேசிய முன்னணி ஆட்சி காலத்திலும், அதன் பின்னர் அமைந்த அரசாங்கங்களாலும் தொடர்ந்து தனிக் கவனம் செலுத்தப்பட்டதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
அந்த மாநிலங்களின் இயற்கை வளங்களிலிருந்து கிடைத்த வருமானம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாகவும், அதேவேளை மத்திய அரசாங்கமும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கான ரிங்கிட் நிதியை செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலில் பல்வேறு கட்சிகளும் கூட்டணிகளும் செயல்பட்டு வந்தாலும், தேர்தல்களில் போட்டிகள் நிலவினாலும், நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னேறுவதற்கு மலேசியாவின் இயற்கை வளங்களும் மக்களிடையே நிலவும் ஒற்றுமை உணர்வும் முக்கிய காரணங்களாக உள்ளன என்று டாக்டர் குணராஜ் கூறினார்.
“நாம் அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மலேசியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும். ஒற்றுமை உணர்வோடு மலேசிய தினத்தை நாம் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து மலேசியர்களுக்கும் இனிய மலேசிய தின நல்வாழ்த்துகள்!



