
செந்தோசா ரியா 2 பகுதியில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் சுதந்திர தின மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
தேசப்பற்று, மகிழ்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
மக்களுடன் நேரத்தைச் செலவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடிய டாக்டர் குணராஜ், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தேசிய தினத்தைக் கொண்டாடுவதைப் பார்ப்பது Malaysia MADANI உணர்வுக்கு உண்மையான அர்த்தத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், செந்தோசா சமூகத்தில் நிலவும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அண்டை வீட்டார் உறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“செந்தோசா சமூகத்தில் ஒற்றுமையும் வலுவான அண்டை வீட்டார் உறவும் தொடர்ந்து மலரட்டும். மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
“Malaysia MADANI: Kesejahteraan Dinikmati – Bersama Masyarakat, Membina Sentosa” என்ற நோக்கத்துடன் மக்களுடன் இணைந்து செந்தோசாவை மேலும் சிறப்பான சமூகமாக உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.



