
நேப்பாளத்தில் பேரிடரில் பாதிப்புக்குள்ளானவர்களின் உடல்களை அடையாளம் காண உதவும் டிஎன்ஏ நிபுணர்களை அனுப்புவதற்கு, மலேசியா நேப்பாள அரசாங்கத்திடம் இருந்து அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நிபுணர்களை அனுப்புவதற்கான விண்ணப்பம் நேபாள அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல், மீட்பு நடவடிக்கை முடிந்த பிறகு டிஎன்ஏ அடையாளப்படுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் தெரிவித்தார்.
பேரிடரில் பலியானவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளை, இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்த நிபுணத்துவம் தேவை.
போதுமான வசதிகள் இல்லாததால், உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாகப் புதைக்கப்படுகின்றன.
மலேசியக் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க எங்களுக்கு டிஎன்ஏ தேவைப்படுகிறது.
தேடல், மீட்பு நடவடிக்கை நிறைவடைந்த பிறகு இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படும்.
தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சிஹாசக் புவாங்கேட்கியோவின் பணிப் பயணத்தையொட்டி இங்கு நடைபெற்ற மதிய விருந்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.



