
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) உடனான ஒத்துழைப்பு அமையாவிட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் (PH) தனித்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
BN உடனான தொகுதிப் பங்கீடு அல்லது தேர்தல் ஒத்துழைப்பு தொடர்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எட்டப்படவில்லை என்று கூறிய அவர், மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ உடன் இதுவரை இணையம் வழியாக மட்டுமே ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், அந்தக் கலந்துரையாடல்கள் இன்னும் முறையான பேச்சுவார்த்தையாக மாறவில்லை என்றும், அடுத்தகட்ட சந்திப்புக்கான தேதி மற்றும் நேரம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாத இறுதிக்குள் கலைக்கப்படலாம் என்று அப்துல் ரவூப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்துரைத்த அமிருடின், மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான இறுதி முடிவு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதால், முதலமைச்சரின் கருத்தை உறுதியான அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.
முந்தைய தேர்தல்களிலிருந்து மாறுபட்ட அரசியல் சூழ்நிலையையும், தேர்தலுக்குத் தயாராக குறுகிய காலமே கிடைக்கக்கூடிய நிலையையும் கருத்தில் கொண்டு, பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள PH தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
BN உடன் உடன்பாடு ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அமிருடின், “எங்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான சூழல் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதுதான்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.



