
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை இழந்து விட்டார் என்பதற்கான தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை என்று சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியிருப்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சாடினார்.
இதை சட்ட ரீதியில் அணுக வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஆதரவை இழந்து விட்டார் என்பதை எம்.பி.க்கள் தீர்மானிக்க வேண்டும், இது ஒரு கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியிருப்பது தொடர்பில் துன் டாக்டர் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.
ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்ததால் அப்போது பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை இழந்தது.
மேலும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்பிக்கள் தன்னை ஆதரிப்பதாக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிக்கையை வெளியிட்டார்.
பெர்சத்துவை சேர்ந்த
ஆறு எம்பிக்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கூறினோம்.
ஆனால் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் அவர் பிரதமராக பதவி ஏற்றார் என்று துன் டாக்டர் மகாதீர் சுட்டிக்காட்டினார்.
ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று கட்சித் தலைவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அம்னோவுக்கு 38 எம்.பி.க்கள் உள்ளனர், ஆனால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் நடவடிக்கைக்கு அனைவரும் உடன்படவில்லை என்று தெரிகிறது.
இப்போது டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் நான்கு பெரும்பான்மைகள் மட்டுமே இருப்பதால், 38 அம்னோ எம்.பி.க்களில் ஒரு சிலர் வாபஸ் பெற்றால் கூட அரசாங்கம் கவிழ வாய்ப்பு உள்ளது.
