
அடுக்கு மாடிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் பராமரிப்புக் கட்டணங்களை செலுத்துவதில் பொறுப்புடன் நடந்துக் கொண்டால்,அங்குள்ள கட்டட நிர்வாகம் முறையாக செயல்படுவதையும்,ஒன்றிணைந்து சொத்துக்களையும் முறையாக செயல்படுத்த முடியுமென மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.
அடுக்ககத்தில் செயல்பட்டு வரும் ஜேஎம்பி எனப்படும் ஒன்றிணைந்த நிர்வாகக்குழு அல்லது எம்சி எனப்படும் நிர்வாக வாரியம் ஆகியவை குடியிருப்பாளர்கள் வசதிக்கும்,பாதுகாப்புக்கும் நிறைவாக செயலாற்ற முடியும் என்றார்.
அதனால் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் தங்களின் பராமரிப்பு கட்டணங்களை முறையாக செலுத்தி மாநில அரசாங்கத்தின் கடன்களை கட்டி விடுவது சிறந்தது என கூறிய அவர்,இதன் மூலமே அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் வசதியும் பாதுகாப்பும் உறுதி செய்ய முடியும் என கூறினார்.
மாநிலத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும்,சீரமைப்பதற்கும் மாநில அரசாங்கம் 276 .4 மில்லியன் வெள்ளியையும் ஒதுக்கியிருப்பதாக,இங்கு பத்து உபான் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சன்னி வில்லா ஆடம்பர அடுக்ககத்திற்கு வருகைப் புரிந்த போது செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.



