
ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க் கட்சி எம்பிக்களை விலை கொடுத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளும்படி ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பணத்தை கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
நோய் தொற்றால் பாதிக்கபட்ட மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மீட்சி திட்டத்திற்கு உதவும் வகையில் இந்த பணத்தை பயன்படுத்துங்கள். அதை விடுத்து எம்பிக்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என அவர் கூறினார்.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் மற்றும் பண்டார் கூங்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் யீ ஆகியோருக்கு குறுந்தகவல் மூலம் அணி மாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீங்கள் அணி மாறி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் 3 கோடி வெள்ளியும் அமைச்சர் பதவியும் காத்துக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
