
சிலாங்கூர் மாநிலம், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கிள்ளான் நகராண்மைக் கழக ஆதரவுடன் வட்டார மக்கள் காய்கறித் தோட்டம் பயிரிட ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் கெபுன் நெனாஸ் வட்டாரத்தில், பொதுமக்கள் குப்பை கொட்டி வந்த இடத்தை அழகுபடுத்தும் நோக்கத்தில் மாற்றி அமைத்ததுடன் பலன் தரும் நிலமாகவும் சுற்று வட்டார மக்களின் முயற்சியுடன் உருமாற்றி அமைத்துள்ளார்.

இதன் தொடர்பில், கிள்ளான் நகரான்மைக் கழகத்துடன் நகர பொதுப்பணித் துறை, வட்டார நில அலுவலகம் ஆகியவற்றின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்று சம்பந்தப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பொது மக்கள், மக்கள் நீதிக் கட்சியின் மகளிர் பிரிவினர் எல்லாம் காய்கறித் தோட்டத்துடன் பப்பாளி உள்ளிட்ட கனிவகை தாவரங்களையும் வளர்த்து பயனடைவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளார் குணராஜ்.

கொரோனா தாக்கத்தினால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளைப் பெறும் முயற்சியில் 31 பேர் ஈடுபட்டுள்ள அதேவேளை, மிகுதியான காய்கறிகளை சேகரித்து தேவையான உள்ளூர் மக்களுக்கு வழங்கிய நிகழ்வும் கடந்த சனிக்கிழமை மக்கள் பிரதிநிதி குணராஜ் தலைமையில் இடம்பெற்றது.
பொதுமக்களின் இத்தகைய ஆர்வத்தையும் கூட்டு முயற்சியையும் உதவும் மனப்பான்மையையும் கண்டு மகிழ்ச்சி அடைந்த குணராஜ், மேலும் 30 பேர் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கான பணியை மக்கள் நீதிக் கட்சி பிகேஆர் புக்கிட் ராஜா வட்டார பொறுப்பாளருமான அவர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

