
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ், “பயனின்றி கிடக்கும் புறம்போக்கு நிலங்களிலும் புதர் மண்டிக் கிடக்கும் ஆற்றோரப் பகுதிகளிலும் காய்கறி தோட்டம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனுமதி அளிக்குமா” என்று வினாத் தொடுத்தார்.
தற்போதைய பேரிடர் காலத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் அது துணையாக அமையும் என்று தன்னுடைய தொகுதியான செந்தோசாவில் இத்தகைய முயற்சி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு பயனாளிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அது தொடர்கிறது என்று குணராஜ் தெரிவித்தார்.
இதற்கு சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பிற்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிமன்ற உறுப்பினர் இஸாம் பின் ஹஷிம் இதன் தொடர்பில் பதில் அளித்தபோது, “இது ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என்றும் இதன் தொடர்பில் ஏற்கெனவே அரசு பரிசீலித்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
இதை விவாசாயம் என்ற அளவோடு வரையறுத்துக் கொள்ளாமல் தொழில் முனைதல், வர்த்தகம் உட்பட பன்முக பயன் விளையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் இதன் தொடர்பில் 30 நிலப் பகுதிகளுக்கு 80 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாண்டான் இண்டா சட்டமன்று உறுப்பினருமான ஹஷிம் இன்றைய சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்.
