
ஜோர்ஜ்டவுன் சுங்கை ஆரா, தென் மேற்கு மாவட்டம் முக்கிம் 12 இல் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்லுடைப்பு நடவடிக்கையால் இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளோடு ஆபத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையினால் அங்கிருந்து சிதறும் கற்கள் வீடுகளின் கூரை மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதாக மக்களிடமிருந்து புகாரை பெற்றுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்தார்.
இந்த கல்லுடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பாளர்கள் அச்சத்துடன் எதிர்க்கொள்ளும் இப்பிரச்சனைக் குறித்து பினாங்கு மாநில அரசு,பினாங்கு மாநில மாநகர் மன்றம்,மாநில நில மற்றும் சுரங்க இலாகா,மாவட்ட நில அலுவலகம்,கனிம மற்றும் புவி அறிவியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் இலாகா ஆகியவை உடனடியாக ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அனைத்து நிலைகளிலும் பெரும் அவதியுறும் குடியிருப்பாளர்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமும் அளிக்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
