
கோவிட்-19 ஆட்கொல்லி கிருமி பரவலால் மக்கள் பலவகையாலும் துன்ப துயரத்தை அனுபவித்துவரும் இந்தக் காலத்தில் கொரோனா மரணம் நிகழும் குடும்பங்களின் உறுப்பினர்கள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பொருளாதார சிக்கலை அதிகமாக எதிர்கொள்வதை கண்கூடாகக் காண முடிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட குடும்பங்களை அணுகி ஆதரவுக் கரம் நீட்டவும் அவர்களுக்கு நிவாரண உதவி நல்கவும் மாநில அளவில் நிவாரணக் குழு அமைக்க வேண்டும் என்று சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் செந்தோசா மக்கள் பிரதிநிதி ஜி.குணராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
குறிப்பாக, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பிணங்களை எரிக்கும் தகனக்கூடம் அமைக்க வேண்டும். அமரர் ஊர்தி சேவை வழங்குவோர் ஆளாளுக்கு விதிக்கும் கட்டணத்தால் மக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கட்டணத்தை சீரமைத்து அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

கொரோனா பாதிப்பினால் மரணமடையும் குடும்பத்திற்கு அரசு உதவி நிதி அளிப்பது ஆறுதலான அம்சம் என்றாலும் அதைப்பெற மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், அந்த உதவி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இஸ்லாமிய நல வாரியத்தைப் போல இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனி அதிகாரிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் சேவையைப் பெறும் வகையில் இதன் தொடர்பில் பந்நோக்கு நிவாரண மையத்தை சிலாங்கூர் அரசாங்கம் அமைத்தால், பாதிக்கப்படும் குடும்பங்கள் இந்த கொரோனா கால நெருக்கடியில் இருந்து மீட்சிபெற வசதியாக இருக்கும் என்றும் ஆகஸ்ட் 26-ஆம் கூட்டத்தில் பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் பேசினார்.
