
மக்கள் சேவையே பிரதானம் என்னும் சமுதாய சிந்தனையோடு செயல்பட்டு வரும் தொழிலதிபரும் நீண்ட கால அரசியல் அனுபவதாரியுமான டத்தோ ஜி.குமார் அம்மான் மீரா எனப்படும் சிறுபான்மையினர் நலக் கட்சியின் உதவித் தலைவராக கட்சியின் தேசியத் தலைவர் கே.பி.சாமியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய நாட்டின் இந்தியர் அரசியல் நீரோட்டத்தின் ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் முக்கிய காரணியாக விளங்கி வருபவர் டத்தோ ஜி.குமார் அம்மான்.
அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவை சமுதாயக் கடப்பாடு காரணமாக பதவியிலிருந்து வீழ்த்தக் காரணமாயிருந்தவர்.
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை நெஞ்சில் சுமந்து GAS எனப்படும் Gerakan Anti Samyvellu இயக்கத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் டத்தோ ஜி.குமார் அம்மான்.
துன் சாமிவேலு கட்சியை விட்டு நீக்கப்பட்ட வரலாற்றுபூர்வ சம்பவம்…
ம.இ.காவின் மேல்மட்ட மத்திய செயலவைக்கு போட்டியிட்ட 80 வேட்பாளர்களுள் 6ஆவது இடத்தைப் பிடித்தது…
ம.இ.காவின் முக்கிய தலைவர்களாக விளங்கிய டத்தோஸ்ரீ பழனிவேலுக்கும் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்துக்கும் அரசியல் ரீதியிலான பேதமைகள் பொங்கி எழுந்தபோது சமுதாய சேவைகள் அதன் காரணமாக பின்னடைவைக் கண்டு வருவதை நேர்முகமாகச் சுட்டிக்காட்டி ம.இ.கா அரசியலிலிருந்து ஓய்வு பெற்றது.
இவரின் நேர்மையான அரசியல் பாணி காரணமாக மீண்டும் ம.இ.காவில் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மூலமாக இணைத்துக் கொள்ளப்பட்டது…
கோவிட் கால நெருக்கடி தொடர்பில் கட்சியின் செயல்பாடுகள், இந்தியர்களின் துர்மரணங்கள் மனத்தளவில் பாதிப்பை ஏற்படுத்த அவை குறித்து பேசினால் அவை அரசியல் பேச்சாக திசை திருப்பப்படும் சாத்தியத்தை உணர்ந்து, பேச வேண்டிய சபையில் பேசா மடந்தையாக இருக்கவும் மனமின்றி கௌரவமாக ம.இ.காவை விட்டு மீண்டும் வெளியேறியது என டத்தோ ஜி.குமார் அம்மான் ஏற்படுத்திய அரசியல் ரீதியான அழுத்தம் வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கம் மிகுந்தவை.
“மக்களுக்கு நல்லது செய்; இல்லையேல் மடிந்து போ” என்ற வைராக்கியத்தை எப்போதுமே முன்வைத்திருக்கும் தலைவர் என்பதால் எத்தனை முறை அரசியல் துறவறம் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டேயிருக்க இவரின் மக்கள் நலச் சிந்தனை முக்கிய காரணமாக உள்ளது.
மீரா கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணன் மற்றும் தலைவர் கே.பி.சாமி மீண்டும் டத்தோ ஜி.குமார் அம்மானை அரசியல் பாதைக்கு அழைத்து வந்துள்ளனர்.



