
12-ஆவது மலேசியத் திட்டம் செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட இருக்கும் வேளையில், இத்திட்டத்தின் மூலம் இந்திய சமுதாயம் எட்ட வேண்டிய அணுகூலம் குறித்து இந்திய சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என எந்தத் தரப்பும் குரல் கொடுக்கவில்லை என்று சமூகவியல் நிபுணர் டெனிசன் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளாக 12-ஆவது மலேசியத் திட்டத்தைப் பற்றி பேசி வந்தாலும் இது குறித்த விழிப்புணர்வை இந்திய சமூக அரசியல் கட்சிகளோ அல்லது பொது இயக்கங்களோ மக்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. இத்திட்டத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல்கூட எங்கும் இடம்பெறவில்லை என்பது வருத்தமானது என்று மலேசிய தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளருமான டெனிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கான மேம்பாடு, குறிப்பாக கோவிட்-19 தாக்கத்தினால் மாறுபட்ட வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு, ஏழ்மை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வு குறித்த கருத்தாக்கம், இயற்கை வளத்தை முறையாகப் பராமரித்தல் குறித்த அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன.
அதேவேளை, இப்பொழுது காலம் கடந்துவிட்டதால், இன-மொழி அடிப்படையில் குரல் எழுப்புவதைவிட, பெருந்திட்டங்களின் மூலம் மலேசியர்கள் அடையக்கூடிய ஒருங்கிணைந்த மேம்பாடு றித்து பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
