
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் முன்னாள் முப்படை ராணுவ வீரர்களின் பணி அளப்பரியது என்று கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்தார்.
நாட்டை காப்பதில் ராணுவ வீரர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
நானும் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்ற முறையில் இதை நன்றாகவே உணர் கிறேன். முன்னாள் ராணுவ வீரர்களின் தியாகத்தை எளிதில் மறக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆகாயப்படை, தரைப்படை, நீர்ப்படை என்று மூன்று துறைகளிலும் இந்தியர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து தங்களது சேவைகளை ஆற்றினார்கள்
இதில் தரைப்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போராடினார்கள். கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நானும் அதில் காயம் அடைந்தேன்.
என்னை போன்று பல இந்திய முன்னாள் ராணுவ வீரர்களும் நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். தற்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியம் மிக குறைவாக இருக்கிறது. இதனை அரசாங்கம் கருத்தில்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய முன்னாள் முப்படை ராணுவ சங்கத்தின் பினாங்கு மாநில கிளையின் பொது கூட்டத்தை தொடக்கிவைத்த போது இவர் இவ்வாறு தெரிவித்தார்
.மேலும் இந்த சங்கத்திற்கு ஆயிரம் வெள்ளியும் அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினர்.



