
பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலை செய்ததாக இந்திய ஆடவரான 29 வயது எம்.கிருபாகரன் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படாத நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை மறுத்தார். சவப்பரிசோதனை மற்றும் ரசாயன அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் நவம்பர் 8 ஆம் தேதி வழக்கு மீண்டும் செவிமடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 28 ஆம் தேதி அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி தாமான் செரூலிங் இமாஸ் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த 40 வயது லீ லிங் தி என்ற பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து அவருக்கு மரணம் விளைவித்தாக கிருபாகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு தப்பி தலைமறைவான அந்த ஆடவரை அன்றைய தினம் காலை 9 .00 மணியளவில் நிபோங் திபால் சங்காட் பகுதியில் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் இவ்வட்டார மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக தென் செபராங் பிறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஏஎஸ்பி கோவிந்தராஜன் செயல்படுகிறார்.
