
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர் மற்றும் மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நோபல் பரிசு பெற்றவரும், இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் சிலை அமைக்கப்படும். திராவிட இயக்கத்தின் முன்னோடியும், தலைசிறந்த இலக்கியவாதியும், முன்னாள் நிதியமைச்சருமான மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும். சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும். மேலும் தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டையில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



