
பேரா பாரிட் புந்தார் கம்போங் யாவ் செங் குடியிருப்பாளர்களுக்கு கோவிட் – 19 பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில தினங்களாக இங்கு வசிக்கும் பல குடும்பங்கள் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கம்போங் யாவ் செங் மஇகா கிளையின் ஏற்பாட்டில் நடப்பட்ட இந்த பரிசோதனை நடவடிக்கையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். கம்பத்து பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கம்போங் யாவ் செங் மஇகா தலைவி த.வள்ளியம்மாள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இவருக்கு உதவியாக பாகான் செராய் மஇகா தொகுதியின் முன்னாள் தலைவரும், பேரா இந்தியர் தொலைநோக்கு சமூக இயக்கத்தின் தலைவருமான ஆர்.பி.ஜெயகோபாலன் செயலாற்றினார். கிரியான் மாவட்ட சுகாதார இலாகா,பாகான் செராய் நாடாளுமன்றம்,அலோர் பொங்சு சட்டமன்றம்,போலீஸ்துறை,முன்களப் பணியாளர்களின் ஒத்துழைப்போடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த உடனடி நடவடிக்கையின் மூலமாக இந்த கம்பத்து பகுதியில் பரவி வரும் கோவிட் – 19 பாதிப்புக்கு தீர்வு காண முடியுமென சமூக சேவையாளருமான ஆர்.பி.ஜெயகோபாலன் தெரிவித்தார்.
