
புதிதாக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட கைரி ஜமாலுடின் மலேசியர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவுகள் மீண்டும் சந்திக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மீரா கட்சியின் தேசியத் தலைவர் கேபி சாமி கேட்டுக் கொண்டார். பல மாதங்களாக இந்தியா செல்ல முடியாமல் இருக்கும் மலேசியர்கள் அங்கு செல்வதற்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும். நம் நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டதால் தங்களது உறவுகளை சந்திக்க முடியாமல் மலேசியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மலேசியர்கள் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக அங்கு செல்ல முடியாமல் இருப்பதால் மலேசியர்கள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் இப்போது நோய்ததொற்று அதிகளவில் குறைந்து இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நோய்ததொற்று மிக குறைந்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. அந்த வகையில் மலேசியர்கள் இந்தியா செல்வதற்கான வாய்ப்பை மலேசிய அரசாங்கம் வழங்க வேண்டும். சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள கைரி ஜமாலுடின் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கே.பி.சாமி கேட்டுக்கொண்டார் . திருமண ஏற்பாடுகள் செய்த மலேசியர்கள் திருமணங்கள் தடை பட்டிருப்பதால் அவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்னாட்டு விமானங்கள் தற்போது இந்தியா வந்த வண்ணம் உள்ளன. ஆகவே மலேசியா விமானங்களும் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் மேலும் சுற்றுலா பாஸ் மூலம் மலேசியர்கள் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றார் அவர். தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்திற்கு இந்த பிரச்சினை கைரி ஜமாலுடின் கொண்டு சென்று சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று கேபி சாமி கேட்டுக்கொண்டார்.
