
பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமைத்துவ அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முனைவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பக்காத்தான் உயர்மட்டத் தலைவர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடத்தியக் கூட்டத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டதாகும். பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அளவில் இதற்கு இணக்கம் தெரிவித்தற்குக் காரணம் மக்களின் உயிர் மற்றும் வருமானத்திற்கு வழி வகுப்பதற்கு ஆகும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பிரதமரின் பதவிக்காலம் இரண்டு தவணைகள், கட்சி தாவல் சட்டம் மற்றும் 18 வயதினர் வாக்களிப்பது தொடர்பில் பல்வேறு சீரமைப்புகளை செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் வலியுறுத்தி வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
