
ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை தலிபான்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்’ என இந்தியா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி பேசுகையில் இதனைத் தெரிவித்தார். தலிபான்கள் கையில் ஆப்கன் மீண்டும் சிக்கியுள்ளது, பெரும் கவலையளித்துள்ளது.. ஆப்கனின் வளர்ச்சி மற்றும் அமைதியில் இந்தியா மிகவும் அக்கறை வைத்துள்ளது. ஆப்கன் மண்ணை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். இதை பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்ய வேண்டும், என்றார்.
