
நாட்டின் பெரியவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசிச் செலுத்திய இலக்கை அடைந்த பிறகுதான் சுற்றுலாப் பகுதிகள், மையங்கள், தீவுகளைத் திறக்க மற்றும் மாநில எல்லையைக் கடக்க தொற்று நிர்வாகச் சிறப்புக் குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது என்று பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இந்த 90 விழுக்காட்டு இலக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் அடைந்து விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஏராளமானோர் தங்களின் குடும்பத்தினரைக் காணச் சொந்த ஊருக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த தளர்வுகளின் மூலம் பொருளாதாரத்தில் சிறப்பான அடைவுநிலையைக் குறுகிய காலத்தில் நாம் பதிவுச் செய்து விடுவோம் என்று நான் நம்புகிறேன். எனினும், இந்த முயற்சியில் நமது பாதுகாப்பு மற்றும் மலேசியக் குடுமத்தின் பாதுகாப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
