
தாமான் செந்தோசா, ஜாலான் லக்சாமானா 6இல் உள்ள கடை வீடு சுற்றுப் பகுதியில் மக்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை நேரில் கண்டறிய செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் களமிறங்கினார். கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் பிரபு உட்பட பொறியியல் துறை, சுற்றுச்சூழல் சேவைத் துறை, நகரத் திட்டமிடல் துறை, கட்டடத் துறை, சுகாதாரத் துறை, அமலாக்கத் துறை, பூங்கா துறை, கே.டி.இ.பி. திடக்கழிவு நிர்வாக நிறுவனம் ஆகியவையும் இணைந்தன. இங்கு வணிகர்கள் மற்றும் மக்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் முறையிட்டனர். 1) காலியானக் கடைப் பகுதிகள் குப்பைகள் வீசும் இடமாகி விட்டன 2) வாகனங்கள் செல்லும் பாதை மிகவும் சிக்கலானதாக உள்ளது 3) மோசமானப் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகள் 4) விபத்துகளைத் தவிர்க்க ‘ஹம்ப்’க்கு விண்ணப்பித்தல் 5) மோசமான, கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள், கார்கள் அகற்றப்பட வேண்டும் 6) இரவு நேரங்களில் தெரு விளக்குகள் மங்கலாக இருக்கின்றன 7) காலியானக் கடை வீடுகள் போதைப்பித்தர்களின் இடமாகி விட்டன 8) சாலைச் சந்திப்புகளில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட வேண்டும் இந்நிலையில் மேம்பாட்டளர்கள் நிர்ணயித்த நிபந்தனைகளை நகரத் திட்டமிடல் துறை மற்றும் பொறியியல் துறையும் மறுஆய்வுச் செய்து புதர் காடாகியிருக்கும் கைவிடப்பட்ட நிலத்தை உடனடியாகச் சுத்தப்படுத்துவது உறுதிச் செய்யப்படும்.
அதே போல் காலியாக இருக்கும் அல்லது செயல்படுத்தப்படாமல் இருக்கும் கடைப் பகுதிகளின் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டு அங்கு குப்பைகள் வீசுதல், எரித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய அதன் உரிமையாளர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கும்படிச் சுகாதாரத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள வணிகர்களின் கருத்துகள், குறைகளைச் செவிமடுத்து அமலாக்கத் தரப்பினர் அனைத்துப் புகார்களுக்கும் குறுகிய காலத்தில் தீர்வுக் காண்பதை உறுதிப்படுத்த வணிகர்களிடையே பணிக்குழு ஒன்றை அமைப்பதற்கும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் வசதிகளை இன்னும் மேம்படுத்துவதற்கனப் பரிந்துரைகள், கருத்துகளைப் பெற இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடனும் 14 நாட்களுக்குள் தொடர் கூட்டம் ஒன்றை செந்தோசா சட்டமன்ற அலுவலகம் நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



