
ரவாங் புக்கிட் பெருந்தோங்கில் 52 தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகளை கட்டும் திட்டம் 1999 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டபடி அந்த வீடுகளை மேம்பாட்டு நிறுவனம் கட்டித் தரவில்லை. வீடுகளுக்காக வங்கியில் பெற்ற கடனையும் தோட்ட பாட்டாளிகள் பலர் கட்டி முடித்துள்ளனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வில்லை என்று பிஎஸ்எம் கட்சியின் செயலாளர் சிவராஜன் தெரிவித்தார்.

மேம்பாட்டு நிறுவனம் இந்த நிலத்திற்கான நிலவரியை செலுத்தவில்லை. இதற்கு முன்னர் செலாயாங் புக்கிட் போத்தா மற்றும் ஷா ஆலம் தாமான் அலாம் பெர்டானாவில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மேம்பட்டாளரிடம் இருந்து அபகரித்து சிலாங்கூர் அரசாங்கம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. அந்த வகையில் பாதிக்கப்பட்டு ஏமாந்து இருக்கும் புக்கிட் பெருந்தோங் தோட்ட பாட்டாளிகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க சிலாங்கூர் அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
