
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஒரு மாதமாக இருட்டில் வாழ்ந்த பந்திங் டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கி உதவி புரிந்துள்ளது சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். சுமார் 40,000 வெள்ளியில் வீட்டுக்கு வீடு தனி மின்சார மீட்டர் பொருத்துவதற்கு தெனாகா நேஷனலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டா பாட்டாளிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி வந்து வசந்தகுமார் ஆர்ப்பாட்டம் புரிந்தது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

வீடமைப்பு திட்டத்தை கைவிட்டவர்கள் மற்றும் மின்சாரத்தை துண்டித்தவர்களுக்கு எதிராக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகளுக்கு ஆதரவாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் உள்ளது. கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை எந்த வகையில் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் மாநில அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையில் ஆலோசித்து வருகிறது என்றார் அவர். மகஜர் வழங்குவதாக கூறி வசந்தகுமார் அழைத்து வந்தவர்கள் உண்மையிலேயே தோட்டப்பாட்டாளிகளா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோட்டப் பாட்டாளிகளின் பலர் நேற்று எங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார். சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகள் கோயில்கள் தோட்டப் பாட்டாளிகள் பிள்ளைகள் கல்விக்கு மானியத்தை நேரடியாக வழங்கி வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் எப்போதும் இந்தியர்களை கைவிட்டதில்லை. அந்த வகையில் டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளி களுக்கும் விடிவுகாலம் பிறக்கும். ஆகவே மலிவு அரசியல் விளம்பரம் தேடுவதை விடுத்து உண்மைக்கு போராட வேண்டும். பொய் என்றும் உண்மையாகி விடாது என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சுட்டிக்காட்டினார்.
