
மலேசியாவிலிருந்து ஜப்பானுக்கு மூன்று யானைகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC) விசாரணை நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான PEKA கோரிக்கை விடுத்துள்ளது.
தாரா, அமோய் மற்றும் கெலாட் என அழைக்கப்படும் மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள தென்னோஜி விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக PEKA தலைவர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் தொடர்பாக அநாமதேய நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த யானைகள் காப்பகத்தில் பிறந்தவை அல்லாமல், காட்டு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சுட்டுக்காட்டுகள் இருப்பதாக அவர் கூறினார்.
“காட்டு யானைகள் நாட்டின் இயற்கைச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை எளிதாக வெளிநாடுகளுக்கு மாற்ற முடியாது. எனவே இந்த இடமாற்றம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்,” என்று ராஜேஷ் வலியுறுத்தினார். மேலும், யானைகள் தைப்பிங் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவற்றுடன் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களில் பஹாங் மாநில கால்நடை அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருப்பது கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இந்த யானைகளின் இடமாற்றத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய MACC உடனடியாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று PEKA சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.



