
ஜொகூர் மாநிலம் பாரஸ்ட் சிட்டியில் இயங்கி வந்த நெட்வொர்க் ஸ்கூல் (Network School), அதன் நிர்வாக நிறுவனமான NSO Malaysia Sdn. Bhd.-இன் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இன்று காலை பள்ளி வளாகத்திற்குச் சென்றபோது, பிரதான நுழைவாயிலில் தற்காலிக மூடல் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்ததுடன், கட்டிடத்தில் இருந்த Network School என்ற பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டிருந்தது.
இருப்பினும், வளாகத்தின் பாதுகாப்பிற்காக சில பாதுகாப்பு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று, இஸ்கந்தர் புத்ரி மாநகர சபை (MBIP), உரிம நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதால், NSO Malaysia Sdn. Bhd.-இன் வணிக உரிமத்தை உடனடியாக ரத்து செய்து, இன்று முதல் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு முன்னதாகவே, வணிக உரிம நிபந்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டு விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நடவடிக்கைகளை நிறுத்துமாறு (Stop-Business Notice) மாநகர சபை நோட்டீஸ் வழங்கியிருந்தது.
ஜொகூர் மாநில அரசின் அறிக்கையின்படி, MBIP-யின் சிறப்பு முழுக் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், நிறுவனம் தனது வணிக உரிமத்துடன் இணைக்கப்பட்ட பல நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியிருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரு வளாகத்தில் செல்லுபடியாகும் வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டது மற்றும் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டு விதிமுறைகளை மீறியது ஆகியவை முக்கிய மீறல்களாகப் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, மாநில அரசு அனைத்து வணிக நிறுவனங்களும் அதிகாரிகள் அமல்படுத்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



