
மலேசியாவில் இஸ்ரேலிய குடிமக்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஜூலை 21 தேதியிட்ட கடிதத்தில், ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கிரெக் லாண்ட்ஸ்மேன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், மலேசியா இஸ்ரேலை அங்கீகரிக்க மறுப்பதே கவலைக்குரியதாக உள்ள நிலையில், பிரதமரின் அண்மைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளனர்.
“எங்கள் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் குடிமக்களை, அவர்கள் கொண்டுள்ள தேசிய அடையாளத்தின் அடிப்படையில் கண்டுபிடித்து நாடுகடத்துவோம் என்று ஒரு நாட்டின் தலைவர் வெளிப்படையாக அறிவிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமெரிக்க வரிப்பணத்தின் மூலம் இத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் ஜோஷ் கோத்த்ஹைமர் (நியூ ஜெர்சி), ஜிம்மி பனெட்டா (கலிபோர்னியா), டேன் கோல்ட்மேன் (நியூயோர்க்), டெப்பி வாசர்மேன் ஷுல்ட்ஸ் (புளோரிடா), ஜாரெட் மொஸ்கோவிட்ஸ் (புளோரிடா), பிராட் ஷெர்மன் (கலிபோர்னியா) மற்றும் ஜேக் அவ்கின்க்லாஸ் (மாசசூசெட்ஸ்) ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், மலேசியாவுக்கு அமெரிக்கா வழங்கி வரும் பாதுகாப்பு உதவிகள், குறிப்பாக சர்வதேச இராணுவக் கல்வி மற்றும் பயிற்சி (International Military Education and Training – IMET) திட்டத்தின் கீழ் மலேசிய இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.



