
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிற்கு அளிக்க முன்வந்த அமைச்சருக்கு இணையான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை ஏற்க அன்வார் மறுத்துள்ளார்.
மாத சம்பளம், மாதாந்திர ஊக்கத் தொகை, வீட்டு வசதி மற்றும் ஆடைக்கான மாதாந்திர தொகை உட்பட ஓர் அமைச்சருக்கான மாத ஊதியமாக 33 ஆயிரத்து 560 வெள்ளி மற்றும் வாகன வசதியை ஏற்க மறுத்துள்ள அன்வார், இந்தத் தொகையை நன்கொடையாக அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அன்வார், இத்தகைய சலுகையை அளிக்க முன்வந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அமைச்சருக்கு இணையாக மாற்றுவதென்பது நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அரசாங்கத்திற்கிடையே கையொப்பமிடப்பட்ட மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களில் ஒன்றாகும். பிரதமர் வழங்க முன்வந்துள்ள இந்த அங்கீகாரத்திற்காகவும் அலுவலகம் உள்ளிட்ட பிற அணுகூலத்திற்காகவும் அன்வார் இஸ்மாயிலுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனாலும் ஊதிய சலுகையை ஏற்க மறுத்துள்ள அன்வார், அதை ஏழைகளுக்கு கொடையளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
“அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு வழங்க முன்வந்துள்ள இந்த அங்கீகாரம், அணுகூலத்தின் அடிப்படையில் நாங்கள் அரசாங்கக் கொள்கையை அப்படியே ஆதரிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல என் கடமைத் தொடர்வேன். நாடு ஜனநாயகப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதற்காக செயல்படுவேன் என்று அவர் மேலும் கூறினார்.



