
தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மில்லினியம் இயக்கமும் சிலாங்கூர் கைலாஷ் சமூகநல இயக்கமும் இணைந்து சீறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியது. தாமான் ஶ்ரீ மூடாவில் இயங்கி வரும் செயிண்ட் ஜோன் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கு சிலாங்கூர் மில்லினியம் இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாஷ் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ஏ.குனேந்திரன் ஆகியோர் வருடந்தோறும் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

4ஆவது ஆண்டாக நடைபெற்ற இவ்வாண்டு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ், சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் சிறுநீரக நோயாளிகளுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. தீபாவளி அன்பளிப்பு பொட்டலங்களை வழங்கி உதவிய டத்தோஶ்ரீ சரவணன். டத்தோஶ்ரீ குனேந்திரன் ஆகியோர் நற்செயல் பாராட்டுக்குரியது என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கணபதி ராவ் குறிப்பிட்டனர்.
