
மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கு நவம்பர் 20இல் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் எந்தத் தரப்பினரையும் இணைத்துக் கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சி உதவித் தலைவர் தியான் சுவா வெளிப்படுத்தியுள்ள கருத்திற்கு ஜசெக அமைப்புச் செயலர் அந்தோணி லோக் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தியான் சுவாவின் தனிக் கருத்தாகத்தான் இருக்க முடியும். ஜசெகவைப் பொறுத்தவரை கட்சியின் நிலை குறித்து, நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் பொதுக்கருத்தின் அடிப்படையில்தான் பிரச்சாரம் அமைய வேண்டும். அத்துடன் முதல்வர் அட்லி ஸஹாரி தலைமையில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி புரிந்த சாதனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கலாம். மாறாக துரோகிகள் துணையை நாட வேண்டியதில்லை என்று அந்தோனி லோக் பதிலடி கொடுத்துள்ளார்.
